

WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,020
Date uploaded in London – 27 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
18-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த டாவா ஷெர்பா: 6 நாட்களுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்!
ச. நாகராஜன்
இமயமலை சிகரங்களில் ஏறுவதற்கு வழிகாட்டியாகப் பணிபுரிந்து வந்த டாவா ஷெர்பா 2026 மே மாதம் 29ம் தேதி அவர் இருந்த கேம்ப் -3 -லிருந்து திடீரென்று காணாமல் போனார். ஆறு நாட்கள் எந்தவிதமான மீட்புப் பணியும் முன்னெடுக்கப்படவில்லை. சிகரம் ஏறும் குழுவினர் தங்கள் ஏணிகளையும் மே 31ம் தேதி எடுத்து விட்டனர். தங்கள் முகாமுக்கும் திரும்பி விட்டனர்.
டாவா ஷெர்பாவின் குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். ஆறு நாட்கள் கழித்து மலையிலிருந்து தவழ்ந்து வந்த டாவாவைப் பார்த்து அனைவரும் பிரமித்தனர்.
அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டார்.
என்ன நடந்தது என்பதை அவர் நேபாளத்தில் இருந்த பி.பி.சிக்கு கூறினார்.
அது உலகளாவிய அளவில் பார்க்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
57 வயதான டாவா முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர். நூறுக்கும் மேற்பட்ட முறைகள் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சிகரத்தில் சென்றுள்ளார். 24600 அடி உயரத்தில் இருந்து மீண்ட அவர் கூறியது:
“நான் பிழைப்பேன் என்றே நினைக்கவில்லை. அப்படியே அங்கேயே உயிரை விட்டு விடுவேன் என்றே நினைத்தேன்.”
குழுவோடு இறங்கி வரும்போது ஒரு போலிஷ் நாட்டுக்காரருக்கு ஆக்ஸிஜன் இல்லாததைப் பார்த்த குழுவினர் அவரது உதவிக்குச் சென்றனர்.
ஆனால் டாவா ஷெர்பாவைக் காணோம். அவருக்கும் ஆக்ஸிஜன் இல்லாமல் போகவே அவரால் நடக்க முடியவில்லை. அவர் ஒரு பனிப்பிளவில் சிக்கிக் கொண்டார். இரண்டு நாட்கள் எதையும் அவர் சாப்பிடவில்லை. பின்னர் ஐஸ் கட்டிகளைக் கடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்தக் கட்டிகள் அவர் பற்களைச் சேதப்படுத்தின.
பின்னர் தன் பையில் கையை விட்டுத் துழாவிய அவர் சில சாக்லட்களைக் கண்டார். அவற்றை உடனே எடுத்து சுவைக்க ஆரம்பித்தார். உருகிய ஐஸ்கட்டியின் மூலம் கொஞ்சம் நீரைப் பருகினார்,
பிறகு திடீரென்று ஒரு பனிச்சறுக்கில் அவர் வீழ்ந்தார். அங்கேயே நெடுநேரம் இருந்த அவர், பின்னர் மெதுவாக எழுந்து கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்தார். இரவெல்லாம் நடையாய் நடந்து அடித்தள முகாமிற்கு வந்து சேர்ந்தார்.
அங்கு கழிவுகளைச் சேகரிக்கும் சிறுவர்கள் சிலரைச் சந்திக்க அவர்கள் அவரை முகாமிற்குத் தூக்கிச் சென்றநர்.
ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த வருட சீஸனில் சுமார் ஆயிரம் பேர்கள் மலையேறச் சென்றனர். அவர்களுள் ஐந்து பேர் இறந்துள்ளனர். 1920 முதல் இதுவரை சுமார் 300 பேர்கள் இந்த மலையேறும் சாகஸத்தில் உயிர் நீத்துள்ளனர்.
ஷெர்பா டாவா பிழைத்தது மனித எல்லையை மீறிய அற்புதம் என்றே அனைவரும் கூறுகின்றனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவரை எப்படி அணுகி பேட்டி எடுக்கலாம் என்ற கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது பி.பி.சி.
குடும்பத்தினரும் அனுமதிக்கவில்லை, மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. அவரை பி.பி.சி எப்படி பேட்டி எடுத்து ஒளிபரப்பலாம் என்று ஏராளமானோர் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிகழ்ச்சி இப்போது பி.பி.சியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிகழ்வைப் பார்க்கும் போது நமது சாஸ்திரங்கள் கூறுவது நினைவிற்கு வருகிறது:
“ஒருவனுக்கு காலம் முடியும் வரை அவன் பேரழிவிலும் கூட மிக நன்றாக இருப்பான். காலம் வரும் போது எதிர்பாராத விதமாக மரணம் அவனை வந்து தழுவும்.”
**