பிரகலாதனின் உபதேசம்! –1 (Post 16,061)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,061

Date uploaded in London – 7 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பிரகலாதனின் உபதேசம்! – 1 

ச. நாகராஜன் 

பிரகலாதன் தன் பிள்ளைகளை அழைத்து தத்வோபதேசம் செய்கிறார்.

அதில் ஒரு பகுதி இது: 

மனிதனின் வாழ்நாள் நூறு வருடங்கள். இந்திரியங்களை ஜெயிக்க முடியாத ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதி வீணாகவே கழிகிறது. மனிதன் இரவில் உறக்கம் என்னும் இருட்டில் தள்ளுண்டு வெறுமனே படுக்கிறான் அல்லவா? 

இளமையில் ஒன்றும் தெரியாத மூடனாகவே அவன் பத்து வருடங்களைக் கழிக்கிறான். இன்னொரு பத்து வருடங்களை விளையாடிக் கொண்டே கழிக்கிறான். இப்படியாக இருபது வருடங்கள் இளமையில் கழிகின்றன!. 

பிறகு கடைசிகாலத்தில் கிழத்தனம் ஏற்பட்டு தேகம் தளர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் இருபது வருடங்கள் கழிகின்றன. இவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஐம்பது வருடங்களில் நாற்பது வருடங்கள் போயின.

மிகுந்த பத்து வருடங்களை வருந்தியும், தீர்க்க முடியாத காமத்தினாலும் அதைத் தொடர்ந்த மோகம் முதலியவற்றினாலும் இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்து இதத்தை மறந்து வீணாகவே கழிக்கின்றான். 

இந்திரியங்களை வென்றவன் இளமை முதற்கொண்டே பகவத் தர்மங்களை அனுஷ்டித்து வாழ்நாளைப் பயனடையச் செய்கிறான். இரவில் கூட நடுவில் இரண்டு யாமங்களை மட்டுமே தூக்கத்திற்குப் பயன்படுத்தி முன், பின் யாமங்களில் பகவத் தர்மங்களை அவன் அனுஷ்டிப்பான். 

இந்திரியங்களை வெல்ல முடியாத எவன் தான் வீட்டில் என்னுடையது என்னும் அபிமானத்துடன் ஆழ்ந்து அறுக்க முடியாத சினேகங்களாகிய பாசங்களால் கட்டுண்ட தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்வான்?

 உயிரைக் காட்டிலும்  மேலான பணத்தாசையை எவன் துறக்க வல்லவன் ஆவான்? திருடன், சேவகன், வியாபாரி ஆகியோர் உயிரை விட்டாவது பணத்தைத் தேடுகிறார்கள் அல்லவா?

 மன இரக்கமுடைய காதலியின் ரகசியமான பாலியல் உறவையும் இனிய உரைகளையும் நண்பர்களின் சகவாசத்தையும் அவர்களினால் கட்டுண்ட ஒருவன் அவற்றை எப்படித் துறப்பான்?

ஒவ்வொரு சொல்லும் அமிர்தம் போல இருக்கின்ற இன்சொற்களைச் சொல்லுகின்ற குழந்தைகளிடத்தில் மனதை ஈடுகொடுத்தவன் அவற்றின் சகவாசத்தை எப்படித் துறக்க வல்லவன் ஆவான்?

 மனதிற்கு இனிய பிள்ளைகளையும் பெண்களையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் மன இரக்கத்திற்கு இடமான தாய், தந்தையரையும் பல்வகையான போகக் கருவிகளையும், அழகிய வீடுகளையும் குலப்பரம்பரையால் ஏற்பட்ட சொத்தையும் பசுக்களையும் வேலைக்காரர்களையும் எப்படி துறப்பான்? எப்படித்தான் அவற்றிலிருந்து மனதை மீட்டுக் கொள்ள வல்லவன் ஆவான்?

 கோசகாரம் என்னும் புழு போல கர்மங்களைச் செய்து கொண்டு காமங்களை எவ்வளவு அனுபவித்தாலும் லோபத்தினால் திருப்தி அடையாமல் உடலின்பம், நாக்கு ஆகியவற்றின் சுகத்தை வெகுவாக மதித்துப் பெரிய மோகத்தில் ஆழ்ந்தவன் அதில் எங்ஙனம் விரக்தி உண்டாகப் பெறுவான்?

 இப்படியாக மனிதர்கள் மதிமயங்கி குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தமது வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழித்துக் கொண்டு தமக்கு இதமான புருஷார்த்தத்தை அறிகிறதில்லை.

ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் ஸர்க்கம்

—தொடரும்

Leave a comment

Leave a comment