WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,113
Date uploaded in London – 21 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்; ஓர் ஆய்வு – 24
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இங்கு மீண்டும் ஒரு கேள்வி எழலாம். ஹனுமன் இராமனை எப்போது அறிந்து கொண்டானோ, அப்பொழுதே சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் என்று சொல்லி இருக்கலாமே? என்று. சந்தேகமில்லாமல் சுக்ரீவன் இராமனின் பக்தன் தான். துளசிதாசரே சொல்கிறார் ‘हम सब सेवक अति बड़भागी। संतत सगुन ब्रह्म अनुरागी॥ निज इच्छा अवतरड प्रभु सुर महि गो द्विज लागि। सगुन उपासक संग तब रहहिं मोक्ष सुख त्यागि॥ நாங்கள் எல்லோரும் உங்கள் சேவகனாக இருப்பதில் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். தேவர்கள், பூமி, பசு, மற்றும் ப்ராம்மணர்களுக்காக இறைவன் தனது விருப்பபடி அவதாரம் எடுக்கிறான். அந்த இராமனுக்குச் சேவை செய்வதில் மோக்ஷத்தையும் தியாகம் செய்யத் தயாராக அடியார்கள் உள்ளனர்.. ஆக இராமனைச் சந்திக்காமலேயே சுக்ரீவன் இராம பக்தனாக இருப்பதில் வியப்பில்லை. பல அடியார்கள் இறைவனைச் சந்திக்காமலேயே அவரது பக்தனாக இருந்து அவருக்குச் சேவை செய்வதில்லையா?
तेहि सन नाथ मयत्री कीजे। दीन जानि तेहि अभय करीजे॥
सो सीता कर खोज कराइहि। जहँ तहँ मरकट कोटि पठाइहि॥2
एहि बिधि सकल कथा समुझाई। लिए दुऔ जन पीठि चढ़ाई॥
தாங்கள் சுக்ரீவனுடன் நட்புக் கொண்டு அவருக்கு அபயம் அளித்து அவரது பயத்தைப் போக்குவீராக. அவர் ஆங்காங்கே கோடிக்கணக்கான வானரங்களை அனுப்பி அன்னை சீதையைக் கண்டுபிடிக்க உதவுவார். இவ்வாறு கூறிவிட்டு இராமன் இலக்ஷ்மணன் இருவரையும் முதுகில் சுமந்து சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான்.
இங்கு ஹனுமன் ஒரு உத்தம தூதனைப் போல் நடந்து கொள்கிறான். சுக்ரீவன் வானர அரசன். சாஸ்திரங்கள் அறிந்தவன். நீதி மான். மனைவியைப் பிரிந்து வாழ்பவன் என்று இராமனிடம் சுக்ரீவனின் குண நலன்களை எடுத்துச் சொல்கிறான். இராமனையும் இலக்ஷ்மணனையும் பார்த்த சுக்ரீவன் ஓடுவதற்குத் தயாராக இருந்தான். அத்தகைய சுக்ரீவனுடன் இராமனுக்கு நட்பு ஏற்படுத்த முயற்சி செய்கிறான். தாங்கள் அவனுக்கு அபயம் அளித்தால் அவன் தங்களுக்கு நிச்சயம் கைம்மாறு செய்வான்..
அன்னை சீதையை அபஹரித்துச் சென்ற அரக்கனை இந்த அடர்ந்த காட்டில் நீங்கள் இருவர் மட்டும் தேடுவது என்பது மிகச் சிரமமான காரியம். சுக்ரீவன் கோடிக்கணக்கான வானரர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பி இந்த வேலையை எளிதாக்குவான். வானரங்களுக்கு எங்கும் செல்லத் தடையில்லை. ஆதலால் இந்த உலகில் எந்த மூலையில் அன்னை சீதை இருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆதலால் தாங்கள் தயவு கூர்ந்து சுக்ரீவனுக்கு நட்புக்கரம் நீட்டுங்கள். தாங்களும் அரசன் சுக்ரீவனும் அரசன் . ஆகையால் தாங்கள் சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுதல் தகும் प्रीति बिरोध समान सन कारिय नीति असि आहि। என்ற பொருளில் சொன்னான் ஹனுமன். மேலும் तेहि अभय करीजै॥ அதாவது சுக்ரீவனது எதிரியைக் கொன்று தாங்கள் அபயக் கரம் நீட்ட வேண்டும் என்று சொல்கிறான் ஹனுமன் .
அடுத்து ஹனுமன் சீதையைக் கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவுவான் என்று கூறுகிறான். இங்கு ஒரு கேள்வி எழலாம். ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் எப்படித் தெரிந்தது? இராமன் ஹனுமனிடம் “इहाँ हरी निसिचर बैदेही। வைதேஹியை இராக்ஷசன் அபஹரித்துவிட்டான் என்றுதான் சொல்கிறான். வைதேஹிதான் சீதை என்று ஹனுமனுக்கு எப்படித் தெரிந்தது? பத்ம இராமாயணத்தில் இராமனும் ஹனுமனும் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது அப்போது இராமனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆக அப்போதும் ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் தெரிய வாய்ப்பில்லை.
பிறகு எப்படி தெரிந்திருக்ககூடும்? இங்கு உரையாசிரியர்கள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அதாவது துளசிதாசர் இராமாக்யா ப்ரஸ்ன रामाज्ञा प्रश्न
என்ற ஜோதிட நூல் ஒன்றை எழுதி உள்ளார். அதில் நாலாவது சர்கத்தில் ஒரு சுலோகம் வருகிறது.
“राम जनम सुभ काज सब कहत देवरिषि आइ़।
सुनि सुनि मन हनुसानके प्रेम उमंग न अमाड़॥” (२२)
நாரதர் இகஷ்வாகு குலத்தில் நடக்கும் பிறப்பு, உபநயனம், திருமணம் போன்ற எல்லா மங்களகரமான விஷயங்களையும் ஹனுமனுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி இருந்தார். அதனால் விதேக அரசன் ஜனகனின் மகளான வைதேகிதான் சீதை என்று தெரிய வந்து இருக்கலாம். அடுத்து ஹனுமனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தது சூர்ய பகவான்.. சுக்ரீவனின் பாதுகாப்புக்காகவே ஹனுமனை சூரியன் நியமித்து இருந்தான். அப்பொழுது சூர்ய பகவன் ஹனுமனிடம் இராம இலக்ஷ்மனர்கள் சீதையைத் தேடி அங்கு வருவர் என்று சொல்லி இருந்தார். அதன் மூலமும் தெரிந்து இருக்கலாம். இராம இலக்ஷ்மணர் இருவரையும் பார்த்ததும் இராமனும் வைதேகி என்று சொன்னதும் ஹனுமனுக்கு அது சீதை என்று தெரிந்திருக்கும். ஹனுமன் இராமனைப் பார்த்ததும் இவன் பிரம்மமான மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான். இவருடைய சக்தி சீதையாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்து கொண்டான்.
ஹனுமன் இராமனிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்து விட்டான் என்பதை துளசிதாசர் ‘एहि बिधि सकल कथा समुझाई- என்று சொல்லுகிறார். அதாவது ஹனுமனின் நோக்கம் இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தவேண்டும். அந்த முயற்சியில் ஏதாவது விவரங்கள் விடுபட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் அவர்களது உறவில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து விவரங்களையும் ஹனுமான் தெரிவித்துவிட்டான் என்று சொல்கிறார் துளசி தாசர்.
இதுவரை வனங்களில் இராமனும் இலக்ஷ்மணனும் நடக்கத் தகுதியல்லாத கரடு முரடான பாதைகளில் நடந்தே வந்துள்ளனர். இதை மனதில் கொண்டே இருவரையும் தனது முதுகில் சுமந்து சென்றான் पीठि चढ़ाई ஹனுமன் என்று சொல்லுகிறார் துளசிதாசர்.
சிலர் ஹனுமன் இருவரையும் தோளில் சுமந்து சென்றார் என்கின்றனர். ஆனால் துளசிதாசர் இருவரையும் முதுகில் சுமந்து சென்றான் என்றே சொல்லுகிறார். காரணம் ஹனுமன் வானரம் வானரங்கள் இரு கைகளையும் கால்களாகப் பயன்படுத்தக் கூடியவை.. காரணம் மலைகளில் ஏறுவதற்கு அவை வசதியானவை. வால்மீகி இராமாயணத்திலும் இதை வால்மீகி உறுதி செய்கிறார்.
भिक्षुरूपं परित्यज्य वानरं रूपमास्थित:।
पृष्ठमारोप्य तौ वीरौ जगाम कपिकुञ्जर:॥ ३४॥
அதாவது ஹனுமன் தனது துறவி வேடத்தைத் துறந்து வானர வேடத்தில் இரு வீரர்களையும் தனது முதுகில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
हनूमान सम नहिं बड़भागी। नहिं कोउ राम चरन अनुरागी॥4॥
गिरिजा जासु प्रीति सेवकाई। बार बार प्रभु निज मुख गाई॥5॥
ஹனுமனைப் போல நல்ல அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. அவனைப் போன்ற சிறந்த இராம பக்தனும் இல்லை. அவனது அன்பையையும் சேவையையும் இராமன் பல முறை புகழ்ந்துள்ளார்.
**