முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

Leave a comment

Leave a comment