HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 84; இந்து மத கலைச்சொல் அகராதி-84 (Post.16,000)

Written by London Swaminathan

Post No. 16,000

Date uploaded in London – 21 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

ராதா

கிருஷ்ணரைப் போற்றிய கோபியர் பெண்களில் மிகவும் புகழ்பெற்றவள் ; முதலில் பாகவத புராணத்தில் பெயர் சொல்லாமல் இவரைப் பற்றிய குறிப்பு வருகிறது ; பின்னர் பத்ம புராணம், பிரம்ம வைவஸ்வத புராணத்தில் இவர் தெய்வீக அந்தஸ்த்தைப் பெறுகிறார் ; குழப்பம் நிறைந்த பிராகிருத நூலான காதா  சப்தசதியில் இவர்பெயர் காணப்பட்டாலும் அது நம்பற்குரியதல்ல ; 700 பாடல்களுக்குப் பதில் 1000  பாடல் இருப்பதால் அதை ஐந்தாம் நூற்றாண்டு நூலாகக் கருதுகிறார்கள்.  தமிழில் இவரை நப்பின்னை என்று சொல்கிறார்கள் ; பிற்காலத்தில் ஜெயதேவரின் கீத கோவிந்தம் (அஷ்டபதி) நூல் மூலமும் மீரா பஜன் மூலமும் இவர் தினசரி பஜனை துதிகளில் இடம்பெறுகிறார் ; கோபியர் காதல் தோல் மூலம் எழும் புலன் இன்பக் காதல் அல்ல அது தெய்வீக நாயக நாயகி பாவம் உடைய  காதல் என்று சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்.

***

ராகவேந்திரா (சுவாமிகள் )

தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள புவனகிரியில் மத்வ பிராம்மணக் குடும்பத்தில் பிறந்து, நீண்ட பயணம் செய்து ஆந்திர மாநிலத்தில் கர்நூலுக்கு அருகில் மந்த்ராலயம் என்னும் இடத்தில் சமாதி ஆனார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இவர் மத்வரின் த்வைதக் கொள்கையைப் பரப்பும் நூல்களை எழுதினார். பிரம்ம சூத்திர உரை, பகவத் கீதை உரை மிகவும் புகழ்பெற்றவை; பக்கதர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இவரது மந்திரத்தை லட்சக் கணக்கானோர் நாள் தோறும் சொல்லிவருவதோடு பல அற்புதங்களை அவர் நிகழ்த்துவதையும் காண்கின்றனர் ; அந்த மந்திரம் :

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே

Poojyaaya Raaghavendraaya

Satya Dharma Rathaayacha

Bhajathaam Kalpa Vrikshaaya

Namathaam Kaamadhenuvey

पूजयाया राघवेंद्राय सत्य धर्म रतायच

भजतां कल्प वृक्षाय नमतां कामधेनुवे

தமிழ் அர்த்தம்:ஸத்யத்திற்கும், தர்மத்திற்கும் உரியவரான ஸ்ரீ ராகவேந்திரருக்கு நமஸ்காரம். தன்னை வணங்குபவர்களின் குறைகளைத் தீர்த்து, அவர்கள் வேண்டியதை அளிக்கும் கற்பகவிருட்சமாகவும், காமதேனுவாகவும் அவர் விளங்குகிறார்.

கர்நாடகத்திலும் ஆந்திரத்தில் இவர் பயணம் செய்த காலத்தில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தினார் .

1624 -ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் விஜயேந்திர மடத்தின் அதிபதி ஆனார் ;பின்னர் மதுரை , உடுப்பி, பண்டரிபுரம் கோலாப்பூர் ஆகியவற்றில் தங்கி மந்திராலயத்துக்குச் சென்றார் ; வழிநெடுகிலும் உபன்யாசங்களைச் செய்து பக்தர் கூட்டத்தைப் பெருக்கினார் . 1663 ஆம் ஆண்டில் மைசூரைவிட்டுப் புறப்பட்டார். 1671 -ஆம் ஆண்டில் மந்திராலயத்தில் சமாதி ஆனார்.

(கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன், மந்த்ராலயத்துக்கும் புவனகிரிக்கும் சென்று தரிசனம் செய்த பாக்கியம் உடையவர்.)

***

ரமண மகரிஷி

திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதி ஆகி உலகப் புகழ்பெற்றவர் ரமணர் ; நான் யார் என்ற கேள்வியை எழுப்பி ஆத்ம விசாரணை செய்து உள்முகப் பார்வை மூலம் அமைதி அடையலாம் என்பது இவரது போதனை ; வெளிநாட்டினரையும் ஈர்த்த இவர் மெளனத்தின் சிறப்பினை வாழ்ந்து காட்டினார் . மதுரையில் படித்த காலத்தில் சாதாரண மாணவராகவே இருந்த இவரை ஒரு நாள் (August 1896, at the age of 16 )திடீரென்று மரணபயம் கவ்வியது ; அப்போது நான் யார் இந்த உடல் என்பது என்ன? அப்படியே செத்தாலும் என்னதான் நடந்துவிடும்? என்ற சிந்தனை தோன்றியது பெரிய புராணத்தைப் படித்ததால் அந்த பயத்தை வென்றதோடு திருவண்ணாமலையில் சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. என்னை யாரும் தேட வேண்டாம் என்று சீட்டு எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குப் பயணமானார் அந்த அருணாசல மலை இவரைக் காந்தம் போல ஈர்த்தது; அங்கு பல குகைகளில் தவம் செய்து இறைவனைக் கண்டார் ; பக்தர் கூட்டம் பெருகியது. இறுதிக் காலத்தில் கையில் புற்றுநோய் வந்தபோதும் பெரிய சிகிச்சைக்குச் செல்ல மறுத்து, உடல் வேறு ஆன்மா வேறு ஆகவே இந்த உடலைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றார் . இவரது தாயார் அழகம்மாள் சமாதியும் ரமணர் சமாதியும்  ரமாணாசிரமும் திருவண்ணாமலையில் உள்ளன 

பிறந்த தேதி – டிசம்பர்  30, 1879,

சமாதி ஆன தேதி – ஏப்ரல் 14, 1950,

தாய் தந்தையர் இட்ட பெயர்- வெங்கட்ராமன்.

தந்தை பெயர்  சுந்தரம் ஐயர்,

அவர் உயிர்நீத்த நாளன்று வானத்தில் ஒரு ஜோதி தென்பட்டது; அவர் அருணாசல இறைவனுடன் ஐக்கியமானதை பக்தர்கள் கண்டு அமைதி  அடைந்தனர் .

***

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ரமண மஹரிஷியைப் போலவே வாழ்க்கை மூலம் இந்து மத்ததை போதித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்; சுவாமி விவேகானந்தா என்ற சீடர் மூலம் இந்து மதத்தை உலகெங்கும் பரப்பியவர் ; சிறுவயதில் வங்காளத்தில் கமார்புக்கூர் என்ற ஊரில் கதாதரர் என்ற பெயரில் அவதரித்தார் . சிறுவயது முதல் படிப்பில் கவனம் செலுத்தாமல் இறைவனை நாடுவதில் ஆர்வம் கொண்டார்; கடவுளின் நாமமும் பஜனைகளும் இவரை வசப்படுத்தின . இஸ்லாமிய கிருஸ்தவ மதக் கொள்கைககளையும் கற்று இந்துமதத்தைப் பின்பற்றினார். பைரவி பிராமணி என்பவரிடம் தாந்திர விஷயங்களையும் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தையும் கற்றார்

சிறுவயதில் இராமாயண, மஹாபாரத நாடகங்களில் நடித்த போதே அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார் ; மாணவப் பருவத்தில் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியில் நடந்த போது நீலமேகம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளை நிறக்கொக்குகள் கூட்டமாகப் பறந்து செல்வதைக் கண்டு இறைவனின் அற்புதமான படைப்பினை கண்டு ஆனந்தம் அடைந்தவுடன் சமாதி கிட்டி வயல் வெளியில் வீழந்தார்; பல நாட்களுக்குப் பின்னர் உணர்வு திரும்பியது . தாயார் சந்திரமணி தேவிக்கு இது கவலை ஊட்டியது; அவருக்கு 20 வயதானபோது ஆறு வயது சாரதா தேவியைத் திருமணம் செய்துவைத்தார் ; இதற்கிடையில் சகோதரர் ராம்குமாருக்கு கல்கத்தாவில் ராணி ராஷ்மணி தேவி உருவாக்கிய தட்சினேஸ்வர காளி கோவிலில் பூஜாரி வேலை கிடைத்தது;  அவருக்கு உதவ கல்கத்தாவுக்குச் சென்ற ராம கிருஷ்ணர் தட்சிணேஸ்வர   காளியைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தார் . மனைவி வயதுக்கு வந்தபோதும் அவரை தேவியின் வடிவமாகக்கண்டு பூஜை செய்யத் துவங்கினார் அவர் மீதும் பக்தி பரவவே அவரும் சன்யாசினி போல வாழத்துவங்கினார் . இருவரின் புகழும் பரவவே பக்தர் கூட்டம் திரண்டது. கடவுளைக் காட்ட முடியுமா? இப்போதே காட்டு!  என்ற கேள்வியுடன் வந்த விவேகானந்தருக்கு அந்த நிமிடமே கடவுள் அனுபவத்தைக் காட்டினார் .

1885- ஆம் ஆண்டில் அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; சிகிச்சை எடுக்க மறுத்தார் ; காளிதேவியின் மூலம் ஏன் நோயைத் தீர்க்கக்கூடாது என்று பக்தர்கள் கெஞ்சினார்கள். காளி தேவிக்கு முன்னால் போனால் இந்த உடல் ஞாபத்துக்கு வராது என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ; உடல் நிலை மோசமாகவே அவரைக் காசிப்பூருக்கு கொண்டு சென்றனர் ; இறுதிக்காலம் நெருங்கிவி ட்டதை அறிந்த அவர் சீடர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துவிட்டு தனது சக்தி முழுதையும் சுவாமி விவேகானந்தருக்கு மாற்றினார் ; அவரும் சீடர்களும் சேர்ந்து ராமகிருஷ்ன ஆஸ்ரமத்தை, மிஷனை உருவாக்கினார்கள் ; ராமகிருஷ்ணர் புஸ்தகம் எதையும் எழுதவில்லை ; புதிய கொளகை எதையும் சொல்லவில்லை; வேத உபநிஷதக் கருத்துக்களை அற்புதமான பொன்மொழிகள் மூலமும் குட்டிக் கதைகள் மூலமும் சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். எப்போது சீடர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து இருப்பார்களோ அப்போது என் ஆவி பிரியும் என்று ஆரூடம் சொன்ன பரமஹம்சரின் ஆவி 1886–ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ல்  உடலைவிட்டு நீங்கியது; 

இறுதி மூச்சின்போதும் சாந்தமே தவழ்ந்தது அவரது புனித முகத்தில்!

(இந்து மதத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள, வேத- உபநிஷத- பகவத் கீதை-யைக் படிக்கத் தேவை இல்லை; அவருடைய ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி என்ற சிறிய நூலைப்படித்தாலே போதும் ; எல்லா மொழிகளிலும் கிடைக்கும் ; கடைசி பகுதியில் உள்ள குட்டிக்கதைகளை முதலில் படியுங்கள். (கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதனின் அனுபவம் இது)

***

ரத யாத்திரை- தேர்த் திருவிழா

இந்துக்களின் ஒப்பற்ற கண்டுபிடிப்பு  ரத யாத்திரை ; கோவிலுக்கு வரமுடியாதவர்களுக்கு இறைவனே வந்து காட்சி தரும் விழா இது; மேலும் ஜாதி மத வேறுபாடின்றி ஒன்றுபட்டால் இறைவனை எளிதில் அடையலாம் என்பதையும் காட்டும் விழா இது. பிரம்மாண்டமான ரதங்களில் இறைவனை எழுந்தருளச் செய்து நீண்ட கனமான கயிறுகளால் ஆண்களும் பெண்களும் அதை  இழுத்து  நிலைக்கு கொண்டு செல்லுவார்கள். தமிழ் நாட்டில் பெரும்பாலான  கோவில்களில் இது நடைபெற்றாலும் ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி நகரின் ஜகந்நாத் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றுவிட்டது;  உலகிலுள்ள பெரிய நகரங்களில்  இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஜகந்நாதர்பலபத்ரா, சுபத்ரா ஆகியோரை மூன்று தேர்தல்களில் இழுத்துச் செல்வதால் எல்லோருக்கும் இது தெரிந்துவிட்டது.

பூரி நகரில் நடைபெறும் விழாவில் ஆண்டுதோறும் புதிய சிலைகளைச் செய்வதும் பழங்குடி மக்களுக்கு அதில் பங்கு கொடுப்பதும் அதை ஒப்பற்றதாக்கி விட்டது. அந்த விழா ஒன்பது நாட்களுக்கு  நடைபெறும்.  ஐந்து நாட்களுக்குத் தேர் ஓரிடத்தில் நின்றுவிட்டு பின்னர் கோவிலுக்குத் திரும்பும் ; வழி நெடுகிலும் மக்கள் இறைவனை வணங்கி காணிக்கைகளை சமப்ப்பிப்பார்கள்

ஆங்கிலத்தில் ஜக்கர் நாட் என்ற சொல் ஜெகன்நாத் என்ற இறைவனின் பெயரிலிருந்து வந்தது; அதே போல ரத என்ற சொல்லிலிருந்து தேர் என்ற தமிழ்ச் சொல் தேர் வந்தது. ரத என்பதைக் கண்ணாடியில் காட்டினால் தேர் என்று வரும்; இதை மொழியியல் வல்லுநர்கள் மிர்ரர் இமேஜ் MIRROR IMAGE என்பார்கள்

பூரி ரதங்களின் சக்கரங்களின் எண்ணிக்கையும் அளவும் பெரியவை; நாடு முழுதுமுள்ள விஷ்ணு பக்தர்கள் லட்சக் கணக்கில் அங்கே கூடுவதாலும் அது சிறப்பிடம் பெறுகிறது. 

TO BE CONTINUED…………………………………

Tags- ரத யாத்திரை- தேர்த் திருவிழா , ராமகிருஷ்ண பரமஹம்சர், ராகவேந்திரர், ரமண மஹரிஷி, ராதா HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 84; இந்து மத கலைச்சொல் அகராதி-84

Leave a comment

Leave a comment