ஹகாகுரே (HAGAKURE) மரணத்தைக் கண்டு அஞ்சாது வாழ வழி! (Post.16,126)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,126

Date uploaded in London – 25 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 27-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

ஹகாகுரே (HAGAKURE) மரணத்தைக் கண்டு அஞ்சாது வாழ வழி! 

ச. நாகராஜன்

ஹகாகுரே என்ற ஜப்பானிய வார்த்தைக்கு அர்த்தம்,

‘மறைந்திருக்கும் இலைகள்’ என்பதாகும்.

இதை சாமுராயின் புத்தகம் என்றும் சொல்வதுண்டு.

நமேசிம்ஹா மிட்சுஷிகே என்பவர் (பிறப்பு: 1632, ஜூலை 10 – மரணம்: 1700, ஜூலை 2) ஜப்பானை அரசாண்ட போது அவருக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர் யமாமோடோ சுனேடோமோ என்பவர். இவர் அவ்வப்பொழுது கூறியவற்றை டஷிரோ சுராமோடோ என்பவர் தொகுத்தார்.

ஆன்மீகம் மாற்றும் நடைமுறை வாழ்வியல் பற்றிய அரிய கருத்துக்கள் அடங்கிய தொகுப்பு இது.

சாமுராய் என்பவர் யார், அவரது லக்ஷணம் என்ன, எப்படி ஒருவர் மரணத்திற்கு அஞ்சாமல் வாழ்க்கையை எதிர் கொண்டு நடத்த வேண்டும் என்பதே இந்தத் தொகுப்பில் முக்கியத்துவம் வாழ்ந்ததாகத் திகழ்கிறது.

ஆயிரத்தி முன்னூறுக்கும் மேற்பட்ட சுவையான கருத்துகள், சம்பவங்கள் அடங்கிய இந்த புத்தகத்திலிருந்து மாதிரிக்கு சில கருத்துக்களை இங்குபார்ப்போமா?

 ஒருவன் தன் குருவுக்குப் பணிந்து நடந்தால் மட்டுமே அவன் ஒரு சிறந்த சாமுராயாக – போர்வீரனாக இருக்க முடியும்.

சாமுராய்க்கான வழி இறப்பது தான். வாழ்வா சாவா என்ற தருணத்தில் ஒரு சாமுராய் தேர்ந்தெடுப்பது சாவைத் தான்!

ஒரு சாமுராய் எப்போதும் உண்மையையே உறுதியாகப் பேசுவான்.

மொருகா ஹிகோமான் என்பவன் ஒரு சிறந்த சாமுராய். ஒரு சமயம் ஒரு விஷயத்தைப் பற்றி அவனிடம் தெய்வங்கள் சத்தியம் செய்து கூறுமாறு கூற அவன் கூறினான்: “ ஒரு சாமுராயின் வார்த்தைகளே எஃகை விட உறுதியானதாகும். இந்த உண்மையை எப்போதும் நான் மனதில் இருத்தி வைத்திருப்பதால் தெய்வங்களூம் புத்தர்களும் என்னிடம் (இதைவிட வேறு) எதை எதிர்பார்க்க முடியும்?”

அவனது இந்த வார்த்தைகளால் அவன் சத்தியம் செய்யுமாறு கூறப்பட்டதை உடனே தெய்வங்கள் வேண்டாம் என்று கூறி விட்டன!

ஒரு சாமுராய் தன் வார்த்தைகள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நான் ஒரு கோழை, அந்த சமயத்தில் நான் அங்கிருந்து ஓடியே இருப்பேன், எவ்வளவு பயங்கரமானது அது, எவ்வளவு வேதனை தருவது அது என்பன போன்ற வார்த்தைகளை விளையாட்டாக, மறந்தும் கூட அவன் கூறி விடக் கூடாது.

எது என்ன ஆனாலும் சரி, ஒரு சாமுராயால் முடியாதது எதுவும் இல்லை. மன உறுதி இருந்தால் மட்டும் போதும், வானத்தையும் மலையையும் கூட ஒருவனால் புரட்டிப் போட முடியும். ஆனால் மனிதன் உறுதியற்றவனாக இருப்பதால் அவனால் தன் மனதை உறுதியுள்ளதாக ஆக்குவதில்லை. ஒருமுனைப்பாடு கொண்டவனே தனது முயற்சியால் வானத்தையும் மலையையும் அசைக்க முடியும்.

நிகழ்காலத்தின் இந்தத் தருணத்தை விடச் சிறந்தது வேறு எதுவும் கிடையாது.

ஒரு மனிதனின் நீண்ட வாழ்வானது ஒவ்வொரு கணமாக நகர்கிறது. இந்த நிகழ்கால தருணத்தை ஒருவன் நன்கு புரிந்து கொண்டு விட்டான் என்றால் அவன் வேறு எதையும் செய்ய வேண்டாம். வேறு எதையும் நாடிப் போக வேண்டாம். இந்த கணத்தின் சத்தியத்தைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

ஒவ்வொருவனும் இந்த நிகழ்காக தருணத்தை நழுவ விட்டுவிட்டு அடுத்து வரும் எதிர்காலத்தில் தான் எதுவும்  நடக்கும் என்று நினைக்கிறான். ஆனால் இந்தத் தருணத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள ஒருவன் அனுபவங்களைக் குவியலாகக் கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்ட கணமே அவன் வேறு ஒருவனாக மாறி விடுவான்.

பெரிய சாதனையாளர்களைப் பற்றி ஒருவர் சொல்லும் போது அதை மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் கேட்க வேண்டும். அது ஏற்கனவே தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட கவனத்துடன் கேட்க வேண்டும். இருபது அல்லது முப்பது தடவை அதைக் கேட்டால் இதுவரை புரியாத ஒரு விஷயம் திடீரென்று உனக்குப் புலப்படும். அந்த கணம் தான் அற்புதமானது. பழைய நாடோடிக் கதைகளில் தான் முன்னோர்களது அற்புதமான புனிதச் செயல்கள் அடங்கியுள்ளன.

தினமும் மரணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். உடல் அங்கங்களே சிதறி விடுவது போல நினைத்தால் மரண பயம் போய் விடும். ‘அந்தக் கணம் இதோ வந்து விட்டது’ என்று நினைப்பதானது மிகவும் கஷ்டமான ஒன்று தான். ஆனால் நினைத்தால் இதைச் செய்யலாம். மரண பயத்தைப் போக்கலாம். உலகையே வெல்லலாம்.

இப்படி ஏராளமான கருத்துக்கள் சுவையான சம்பவங்களுடன் ஹகாகுரேயில் தரப்பட்டுள்ளது. இணையதளத்தில் இந்த நூலைப் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இதைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகள்!

**

Leave a comment

Leave a comment