WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,132
Date uploaded in London – 27 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தினமணி கொண்டாட்டம் பகுதியில் 23-8-26 இதழில் வெளி வந்த கட்டுரை!
கடலுக்கடியில் இருக்கும் அதிசய ஏரி!
ச. நாகராஜன்
உலகெங்கும் ஆங்காங்கே தரைப்பரப்பில் ஏரிகள் இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால் கடலுக்கடியில் இருக்கும் ஒரு மர்ம ஏரியைப் பற்றிச் சிலரே அறிவர். அதிலும் இந்த ஏரி ஒரு அதிசய ஏரி. இது தன்னுள் எந்த ஒரு ஜீவராசியையும் நுழைய அனுமதிக்காது. உள்ளே நுழைந்தால் இறந்து மடிய வேண்டியது தான்! மெக்ஸிகோ வளைகுடாவில் ஆயிரக்கணக்கான அடியின் கீழ் உள்ள ஒரு அதிசய ஏரியை தூர இருந்து இயக்கும் வாகனம் ஒன்றின் மூலம் (Remotely Operated Vehicle – ROV) விஞ்ஞானிகள் 2015ம் ஆண்டு கண்டுபிடித்து மென்மேலும் அதன் மர்மம் பற்றி ஆராய்ந்து விளக்க ஆரம்பித்துள்ளனர்.
விஷம் நிறைந்த உப்பு நீர் கொண்ட இந்த ஏரியை அபாயகரமான ஏரி என்று அனைவரும் கூறுகின்றனர். Jakuzzi of Despair – மனத்தளர்ச்சியைத் தரும் நீரடிக் குளியல் என்று இந்த ஏரியை விளக்குகின்றனர்.
பெரிய நீர் வாழ் பிராணிகள் இங்கு வந்தால் உடனடி மரணம் நிச்சயம். விஞ்ஞானி ஒருவர் நகைச்சுவையாக, “கடலுக்கடியில் பிராணிகள் வந்து இறப்பதற்கு ஒரு இடம்” என்று இது பற்றிக் கூறினார்.
நூறு அடி குறுக்களவு உள்ள இந்த ஏரி 3300 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியின் ஆழம் 12 அடி.
இந்த நீரை எடுத்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் இது சாதாரண கடல் நீரை விட நான்கு மடங்கு அதிக உப்பு கரிப்பு உள்ளது என்கின்றனர். இதன் அடர்த்தியும் அதிகம். இதில் உள்ள உஷ்ண நிலை 19 டிகிரி செல்ஸியஸ். (66 டிகிரி ஃபாரன்ஹீட்) உயிர் வாழ முடியாத அபாயகரமான நிலை இது தான்.
இப்படிப்பட்ட பகுதிகள், ஹைட்ரோகார்பன் கடலிலிருந்து வெளியேறி கடலின் சுற்றுப்புறச் சூழ்நிலையில் நீரோடு எதிர்வினையாற்றும் பகுதிகளாகும். இங்கு எண்ணெய் மற்றும் வாயுவளம் அதிகமாக காணப்படும். ஆனால் இங்குள்ள விஷமயமான உப்புநீர் ஏறி, அடர்த்தியில் உள்ள பெரிய வேறுபாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை. இங்குள்ள அதிக அளவான மெதேன் மற்று ஹைட்ரஜன் சல்ஃபைடு ஒரு சுவர் போல எழும்பி நின்று நீர் வாழ் கடல் சிப்பிகளை உள்ளே வர விடாமல் தடுக்கிறது.
இந்த அதிசய ஏரியின் நீரை எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூரத்திலிருந்து இயக்கும் கருவிகள் பலவற்றை வைத்து சுற்றுப்புறச் சூழல், அடர்த்தி உள்ளிட்டவற்றைப் பற்றி மேலும் பல ஆய்வுகளும் இந்த ஏரியில் நடத்தப்பட்டு வருகிறது.
உலகின் அதிசயங்களுள் இந்த ‘மரண ஏரியும்’ ஒன்று!
**