
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,144
Date uploaded in London – 30 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சாயி தனது பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்
சாயி ஒருநாளும் தனது பக்தர்களுக்கிடையே வெறுப்பை பொறுக்க மாட்டார்!
25-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா தன் பக்தர்களிடையே ஆற்றிய உரை:

மஹராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண் பக்தையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.
தனது வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கூட அவள் அர்ப்பண மனோபாவத்துடன் அவற்றைச் செய்து வந்தாள். நடப்பது என்பது அவளைப் பொறுத்த மட்டில் ஒரு புனித யாத்திரை தான்; பேசுவது அவளைப் பொறுத்தமட்டில் ஜபமாகும். தனது கணவன் சாப்பிட உட்காரும் போது தரையை சாணி உருண்டையால் சுத்தம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டே சுத்தம் செய்வாள்.
அவளது தவமானது எவ்வளவு ஆழ்ந்த பக்தியுடன் செய்யப்பட்டது என்றால் அந்த சாண உருண்டை அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலில் உள்ள கிருஷ்ணனின் சிலையின் மீது ஒவ்வொருநாளும் விழுந்து படிந்தது.
கோவிலின் குருக்கள் இந்த மர்மமான அசிங்கத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். பீதியால் அவர் நடுங்கினார். இப்படிப்பட்ட அசிங்கத்தைத் தினமும் தான் பார்க்க வேண்டியிருக்கும் துரதிர்ஷ்டத்துடன் தான் வாழ வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார். தினமும் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட அளவேயான சாண உருண்டை சிலையின் மீது படிந்திருக்கும் அசிங்கம்.. அவர் அவமானத்தால் தலை குனிந்தார்.
இந்த இழிவான நிகழ்வைப் பற்றி நினைத்துக் கொண்டே ஒரு நாள் அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கிருஷ்ணார்ப்பணம் என்று கூவுவதைக் கேட்டார். மற்ற பெண்மணிகள் சொல்வது போலச் சொல்லிய அவள் சாண உருண்டையை வெளியே எறிந்தாள்.
இதைப் பார்த்த குருக்களுக்கு சந்தேகம் வந்தது. சாண உருண்டையை அவள் எறிந்த நேரம், அதன் அளவு, வடிவம் எல்லாவற்றையும் நன்கு கவனித்த அவர் அவளே தினமும் கிருஷ்ணர் மீது படிந்து சிலையை அசிங்கப்படுதும் சாணத்திற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.
அவளைப் பிடித்து அடி அடியென்று அவர் அடித்ததனால் சாணத்தை எறிந்த கை முறிந்தது.
அந்தப் பெண்மணியை அடித்து தண்டித்த தன் செயலுக்காக தன்னை கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற வெற்றி நினைப்புடன் கோவிலுக்குத் திரும்பினார் குருக்கள்.
ஆனால் கிருஷ்ணரின் வலது கை உடைந்திருப்பதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது அந்தப் பெண்மணியின் கரத்திலிருந்த அதே இடம் தான்! பாவம், பரிதாபமான அந்தக் குருக்கள், “ ஓ, கிருஷ்ணா, உன் மீது கொண்ட பக்தியினால் தானே அவளை அடித்தேன், உன்னை அவள் அசிங்கப்படுத்தி வந்தாளே” என்று வேதனையுடன் ஓவென்று அழுதார்.
கிருஷ்ணர் உடனே, “நான் நேசிக்கும் எல்லோரையும் நீயும் நேசிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்” என்றார்.
இப்போத்து நானும் நீங்கள் இப்படியே நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் உங்களை விரும்ப வேண்டும். உங்களது சிறந்த ஆசைகளை விரும்பவேண்டும். எனது பக்தர்களிடையே வெறுப்பையோ அல்லது பொறாமை படுவதையோ அல்லது உங்களை நீங்களே பலஹீனமானவன், சாதாரணமானவன் என்று நினைத்து வெறுப்பதையோ நான் பொறுக்க மாட்டேன்,
இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வார்த்தை! நீங்கள் உங்கள் உள்ளே இருக்கும் தூய்மைக்கும் வலிமைக்கும் தக்கபடி வாழ வேண்டும்.
**